திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்


c7196ea1bfe3eb484d25b8f3746f4993

திருத்தணியிliருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது கொசஸ்தலை ஸ்ரீவீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும் சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது.

62e52b56a01871ef53e8b90c12eec9e2-1

கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டுக்காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்றும் அவற்றில் ஒன்றே இந்த நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றாகும் என்கின்றார்கள். திருத்தணியை அடுத்த நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயத்தின் அனுமன் சுயம்பு மூர்த்தி எனக் கூறுகிறார்கள். இந்த அனுமனின் சிலை கரும்பச்சை நிறத்திலான பாறையில் அமைந்ததாகும். இந்த சிலையின் சிறப்பு பல உண்டு. இந்த சிலை அனுமனை பால அனுமன் என்கின்றார்கள். வலது பக்கத்தை நோக்கி பார்த்தபடி அவர் நின்று இருப்பது விசேஷமானது. வலதுகை மேலே தூக்கியபடி இருக்க அதில் அபய முத்திரை காணப்படுகிறது. சிலையின் சிறப்பு இன்னும் பல உள்ளது. அனுமன் நீண்ட வாலின் நுனியில் மணி, தலையில் நாமம், காதுகளில் குண்டலங்கள், கோரப்பற்களுடன் சங்கு, தலை உச்சியில் தாழம்பூ, அருகில் சுதர்சன சக்கரம், கழுத்தில் சாலிக்கிராமத்திலான மாலை, இடுப்பில் துஷ்டர்களை வதம் செய்யும் கத்தி போன்றவற்றுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் தனி ஆஞ்சநேயர் அல்ல.

ef4370697182f6cd55fbf213c204c9c6

சாதாரணமாகவே வாயுவின் புத்திரரான ஆஞ்சநேயரை சிவனின் அவதாரம் அல்லது சிவனின் அம்சம் என்பார்கள். ஆகவே மகாபாரத யுத்த காலத்திலே பூலோகத்தில் கொடுமைகளை செய்து வந்திருந்த அரக்கர்களை வதம் செய்து மக்களை துயரங்களில் இருந்து மீட்க இங்கு வந்து அவதரித்திருந்த ஆஞ்சநேயருக்கு அநேக சக்தி தரும் வகையில் அவருடைய உருவில் பல்வேறு அம்சங்களை சிவபெருமான் கொடுத்தார். தலையில் ராமர் பாதம், இடதுக்கையில் தாமரைப்பூ உருவில் மகாலஷ்மி, காதுகளில் அணிகலன்களாக காளிதேவி, கோரைப்பற்களாக துர்க்கை, இடுப்பில் கத்தியாக பரசுராமர், நெற்றியில் திருநேத்ரமாக (கண்) சிவபெருமான், இருபுறங்களிலும் சங்கும் சக்கரமுமாக விஷ்ணு பகவான், கால்களில் தண்டையாக கிருஷ்ணர் என பல தெய்வங்கள் ஆஞ்சநேயரின் உடலில் குடியேற, அங்கு வந்த பார்வதி தேவி அனைவரும் அனைத்து இடத்தையும் அனைவரும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதினால் தனக்கு தங்க ஒரு இடம் இல்லையே என அனுமானிடம் கூற அவரும் தனது வாலை உயர்த்திக் காட்டி அதில் கட்டப்பட்டு இருந்த சிறு மணி கட்டப்பட்டு உள்ள இடமே மீதம் உள்ளது என்று கூற பார்வதி அவர் வாலில் மணியாக அமர்ந்து கொள்ள, அங்கு வந்த வியாசர் ஒரு பூணூலாக மாறி அந்த ஹனுமாரின் உடலில் அமர்ந்துக்கொண்டார். அந்த ஆஞ்சநேயர் இப்படியாக பல்வேறு தெய்வங்களின் சக்திகளைக் கொண்டவராக இருந்துக்கொண்டு அங்கு வந்து தன்னை வணங்கித் துதிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் செல்வமும், வாழ்க்கையில் வளத்தையும் குறைவில்லாது அள்ளித் தந்து வருகிறார் என்கின்றார்கள்.

மனதில் அமைதியையும், ஆனந்தத்தையும் அள்ளித்தரும் ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயரை வணங்கினால் வெற்றியும், செல்வமும் வீடு தேடி வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில் தனித்தனி சன்னதிகளில் வினாயகரும், குடும்ப சமேதகர்களாக ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி போன்றவர்களும், தனி சன்னதியில் நவகிரகங்கள் தமது வாகனங்களுடன் காட்சி தந்தபடி இருக்கிறார்கள். அனுமனைப் நேராகப் பார்த்தபடி சனிபகவானும் இருப்பது இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பாகும். அதனால்தான் இங்கு வந்து சனி பகவானையும் அனுமனையும் வணங்கினால் சனியின் எந்த தொல்லை இருந்தாலும் அவை பூரணமாக விலகிவிடும் என்கிறார்கள்.

மூலஸ்தானத்தில் நின்றிருக்கும் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் தன்னிடம் வந்து வேண்டிடும் பக்தர்களுக்கு காட்சி தந்து அபயம் அளிக்க, அதே சன்னதியின் இடப்புறத்தில் நாகதேவதை சன்னதியும் இருக்க சன்னதியின் பின்னால் இரண்டு சந்தன மரமும், நாக சன்னதியின் பின்புறத்தில் சிவப்பு செம்பருத்தி மரமும் உள்ளன. அந்த நாக சன்னதியில்தான் அனுமனின் பாறையைக் காலங்காலமாக காத்து நிற்கும் நாகத்தின் வம்சமும் தொடர்ந்து வசிப்பதாகக் கூறுகிறார்கள். ஆகவேதான் அந்த பாம்பு புற்றை அகற்றாமல் பூஜித்து வருகிறார்கள். இன்றும் அந்த புத்தில் நாகம் வந்துவிட்டுச் செல்வதாகவும், ஆனால் யாரும் அதற்கு இடையூறு செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தின் ஒரு முக்கிய அம்சம் இங்கு நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் ஆகும்.

25e16899b81d709ec2688c150dd04aa2-1

மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சன்னதியில் இருந்து புறப்பட அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம்.

இந்த சுப வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். அதனால் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இங்குவந்து ராம-சீதா திருமணத்தன்று கொடுக்கப்படும் காப்புக்கயிற்றை கட்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.அந்த நிகழ்ச்சியன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள்.

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் பிரதான சாலையில் இருந்து திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையின் எதிர்புறமாக அதாவது நேர் எதிரில் அமைந்துள்ள சின்ன சாலை வழியே தாழவேடு, பூனிமாங்காடு போன்ற கிராமங்களின் வழியே இருபுறத்திலும் இயற்கை எழில் தரும் விவசாய நிலங்களின் வழியே போடப்பட்டு உள்ள நல்ல பாதையில் சென்று இந்த ஆலயத்தை அடையலாம். ஆலய வளாகத்தின் நுழைவாயில் அருகே உள்ள மைதானத்தில் அமர்ந்தக்கோலத்தில் தியானிக்கும் ஆஞ்சநேயரின் பிரம்மாண்ட சிலையை காணலாம். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணிக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கும் வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.

ஜெய் ஸ்ரீராம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews