பசி, பஞ்சம் போக்கும் அன்னப்பூரணியை இப்படித்தான் வணங்கவேண்டும்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். .மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி,தாளாண்மை, காமம் ஆகிய பத்துதான் அது. மனித உணர்ச்சியில் பலம் வாய்ந்தது பசியாகும். பசி ஒரு மனிதனை எந்த நிலைக்கும் தள்ளும்.

பசி உணர்வு உண்டாகி, உணவு கிடைக்காதபோது பொய், களவு, திருட்டு ஆகியவற்றில் ஈடுபட வைக்கும் அதனால்தான் ஞானிகள் பசியை ஒரு நோயாக கருதி பசிப்பிணி என்கின்றனர். உலகத்திற்கே படியளக்கும் தெய்வமாக இருப்பவர்தான் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை நித்தம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படும் நிலை எப்போதும் ஏற்படாது.மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதோடு வாழ்வில் சகல விதமான நற்பலன்களை ஏற்படுத்தி தரவல்ல அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.மேலும் நவராத்திரி காலத்திலும் அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்படும்.

அன்னப்பூரணி விரதத்தினை வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை, பௌர்ணமியில் இருக்கலாம். காலையில் குளித்து முடித்து காலையிலிருந்து மாலைவரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மாலை 6 மணியளவில் பூஜையறையை சுத்தம் செய்து, மூன்று தீபமேற்றி, பச்சரிசி மாவினால் கோலமிட்டு ஒரு மனையினை வைத்து வெள்ளைத்துணியை விரித்து சிறுசிறு கிண்ணங்களில் தானியங்கள் , அரிசியினை போட்டு வைக்கவேண்டும். அரிசி கிண்ணத்தில் அன்னப்பூரணி சிலையை வைத்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து, வாசனை மலர்கள், இனிப்பு, பழங்கள் வைத்து கற்பூர தீபம் காட்டி அன்னப்பூரணியை வேண்டிக்கொள்ளவேண்டும்.

அன்னப்பூரணிக்கு பிடித்த பாயாசம், உலர் பழங்கள், கற்கண்டு வைத்து ம் வழிபடலாம். அன்னபூர்ணாஷ்டகம், அன்னபூர்ணாபஞ்சரத்னம் போன்ற ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம். பூஜை முடித்தபின் பிரசாதத்தை வீட்டிலுள்ளோர் சாப்பிட்டு பிறகு, இயலாதவர்களுக்கு தானம் செய்யலாம்.

ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவத் யன்னபூர்ணே
மமாபிலிக்ஷித மன்னம் தேஹி ஸ்வாஹா’

மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews