முற்பிறவி பாவம் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

பூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேப்போல, பூமியின் துணைக்கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. பூமியிலிருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்க முடியும். எனவே நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி வரும் போது, நிலவில் நமக்கு தெரியாத மறு பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது. அப்போது நம் கண்களுக்கு நிலவானது புலப்படாது, இதை தான் நாம் அமாவாசை என்று கூறுகின்றோம்

ஜோதிடரீதியாக சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரியாது. மூன்றாம் நாளான துவிதியை திதியில் சிறிது நேரமே தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது மாலை 6.30 மணியளவில் தோன்றும் .

காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் மூன்றாம் பிறையை பார்க்கவேண்டும் என கூறினார்கள்.மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். ஏனெனில், மூன்றாம் பிறையானது தெய்வீக அம்சங்களில் ஒன்றாகும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்களின் சிரசில் இந்த மூன்றாம் பிறை இருக்கும்.

ed36d3e37e7e0f61affb74a62b48de3e

ரோகிணி, கார்த்திகை, திருவாதிரை, திருவோணம் உட்பட 27 நட்சத்திர பெண்களை சந்திரன் மணந்தான். ரோகிணி நட்சத்திரத்துடன் மட்டுமே காதலுடன் இருப்பதை கண்ட மற்ற பெண்கள் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். எந்த அழகை நினைத்து கர்வம் கொண்டாயோ அது தேய்ந்து போகட்டும் என தட்சன் சாபமிட்டான். தட்சனின் சாபத்தால் நாளுக்கு நாள் சந்திர பகவானின் உடல் தேய்ந்துக்கொண்டே வந்தது. இதனால் 27 நட்சத்திர மனைவிகளும் கவலை கொண்டு தங்களின் தந்தையிடம் சாபத்தை திரும்ப பெறுமாறு கேட்டனர். சாபத்தை திரும்ப பெற்றால் தனது புண்ணியம் மொத்தமும் போய்விடும். அதனால் தன்னால் சாபத்தினை திரும்ப பெறமுடியாது என்று கூறிவிட்டார். சிவப்பெருமானை நினைத்து தவமிருந்தால் சிவபெருமான் தக்க வழிகாட்டுவார் என தமது மகள்களுக்கு அறிவுரை வழங்கினார்.

27 நட்சத்திர பெண்டிரும், சந்திரனும் சிவபெருமானை நோக்கி தவமிருந்தனர். அவர்கள் தவத்தை மெச்சிய சிவபெருமானும், சந்திரன் 15 நாட்கள் வளர்ந்து, 15 நாட்கள் தேய்வது என வரம் அருளியதோடு, மூன்றாம் பிறையாக தனது தலையில் சூடிக்கொண்டு சந்திரனை அருள் வழங்கினார்.

மூன்றாம் பிறையை வணங்குவதால் கிடைக்கும் பலன்..

மூன்றாம் பிறையாக இருக்கும் சந்திரனை தரிசிக்கும் வேளையில், காசை கையில் வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மூன்றாம் பிறையை காண்போருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.ஆயுளை விருத்தியாக்கும். செல்வம் கிட்டும். பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும். திங்கட்கிழமையில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்தால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews