மாற்றங்கொள்ளாதது அன்பு – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -7


1a55728a19700a1cfd03cd1d431a8d66

பாடல்

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:

தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப்போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதை எல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?

விளக்கம்: அன்பெனப்படுவது மாற்றங்கொள்ளாதது, இறைவன் எல்லோருக்குமே பொதுவானவன். அவனை நாங்கள் துதிக்கும்போது பொறாமைக்கொள்வாய். அப்பேற்பட்ட நீ இன்று, நாங்கள் ஈசனின் பெருமைகளைக்கூறி தொழுதுக்கொண்டிருக்கும்போதும் நீ படுக்கையைவிட்டு எழாமல் இருக்கிறாயே! உன்னுடைய அன்பு இடம் மாறிவிட்டதா?! ஈசனிடமிருந்து தூக்கம்தான் உனக்கு பரிசாய் கிடைத்ததா?! என பாடப்படுவதாய் அமைந்த பாடல் இது..

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews