சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?!


1650f7be0cbbda4e93d3c4c562a3f178

இந்துக்களுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கு எதாவது ஆன்மீக நிகழ்வுகள் இருக்கும். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு சித்ரா பௌர்ணமி எனப்பெயர். “திருச்சி நெடுங்குளம் நெடுங்கலாத சுவாமி கோயில் கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு பின் நடந்த பத்து நாள் விழா பற்றிய குறிப்பும், யோகிகளுக்கு உணவளித்த குறிப்பும் உண்டு.
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ராசராச சோழனின் பத்தாம் ஆண்டு கல்வெட்டு சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த கல்வெட்டு குறிப்பு உள்ளது .

இனி சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளை பார்க்கலாமா?!

சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் சொக்கநாதரை வழிப்பட்டு இழந்த இந்திரலோகத்தை பெற்றான். மதுரையில் மிகவும் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் இந்நாளில்தான்…

32ef3682019cdcd687f03adea6f75d38

சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும்.  மகாபாரத போருக்கு முன்பாக களப்பலியிட ஆள் தேடியபோது  அர்ச்சுனனுக்கும், நாகலோக கன்னிகையான உலுப்பிக்கும் நடந்த திருமணத்தின் விளைவாய் பிறந்த அரவான் முன்வந்தான்.   ஆனால், தனக்கு திருமணம் ஆகி பெண்சுகம் அனுபவிக்க வேண்டுமென அரவான் கோரிக்கை வைக்க, ஒரு நாளைக்கு எந்த பெண்ணும் அரவாணின் மனைவியாக முன்வராததால் க்ருஷ்ணரே பெண்ணாய் மாறி அரவானை மணந்து ஒருநாள் மனைவியாய் வாழ்ந்து மறுநாள் விதவையானார். அந்நிகழ்ச்சியின் நினைவால்தான் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் கூடி பூசாரி கையால் தாலி கட்டி மறுநாள் சித்ரா பௌர்ணமியன்று தாலி அறுக்கின்றனர்.

6c4635b26476205bb8862d27c1dfea50

ஜோதிப்பிழம்பான திருவண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலம் வருவது அறிந்த ஒன்றே.  ஆனால், இந்த சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள்லாம் அரூபமாய் கிரிவலம் வருகிறார்கள் என்பது ஐதீகம் . அதேப்போல அந்த வருடத்தில் தவறவிட்ட கிரிவலத்தின் பலனை இந்த நாளில் கிரிவலம் வருவதால் பெறலாம்.

கன்னியாக்குமரியில் சூரியன் மறைவதை தினந்தோறும் காணலாம். ஆனால், சூரியன் மறையும்போது சந்திரன் முழுநிலவாக, மறையும் சூரியனோடு சேர்த்து இன்று காணலாம்…. இதைக்காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.

குற்றாலத்தில் செண்பகாதேவிக்கு இத்தினத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்வித்தால் சந்தன வாசனையோடு மழைப்பெய்யுமென்பது ஐதீகம்.

சித்தர்கள் பலரும் வசிக்கும் திருஞானச்சம்பந்தரால் பாடல்பெற்ற கஞ்சன் மலையில் இன்று அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறும். சித்தர்கள் மலைக்கோவிலில் இருக்கும் நீரூற்றிலும், மலைமேலுள்ள சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கும் தீர்த்தத்தலிலும் நீராடி கஞ்சன்மலையை நட்சத்திரங்களா வலம் வருவதாய் ஐதீகம்.  இரவு 11 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை நட்சத்திர ஒளி மலையை சுற்றி நகர்ந்து மறைவதை தரிசிக்கலாம்.

ஆடி அமாவசையன்று விரதமிருந்து பிதுர் தர்ப்பணம் செய்வதுப்போல தாய்க்காக சித்ரா பௌர்ணமியன்று விரதம் மேற்கொள்வர்.

2198d9ea95c868919e32aacc55ff4cd6

பாம்பன் சுவாமிகள் ராமேசுவரம் அருகில் உள்ள பிரப்பன்வலசை என்னும் ஊரில் மண்ணில் சவக்குழி போல வெட்டி   அதில் புதைந்து முருகனை நினைத்து தவமிருந்தார். ஏழாவது நாள் முருகன் காட்சியளித்து ஆசீர்வதித்தார், அதுமட்டுமில்லாமல் முப்பத்தி ஆறாவது நாள் மீண்டும் அவர்முன் தோன்றி குழியை விட்டு எழுந்து வா என பணித்தார். அவ்வாறு முருகன் பணித்த நாள் இந்நாளே.

பத்தினி தெய்வமான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த கோவில் கேரள தமிழக எல்லையில் வருடத்திற்கொருமுறை சித்ரா பௌர்ணமியன்று மட்டும் பக்தர்கள் செண்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து அம்மன் கோவில்களிலும் சுமங்கலி பெண்கள்  சித்ரா பௌர்ணமியன்று பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பர்.

அனைத்து மாத பௌர்ணமியிலும் நிலவு முழுமையாய்  இருந்தாலும் ஆங்காங்கு நிலவில் சிறு களங்கங்கள்  தெரியும். ஆனா,  சித்ரா பௌர்ணமியன்று  நிலவு தனது கிரணங்களை  பூரணமாய் பொழிந்து துளிகூட களங்கமின்றி காட்சி அளிக்கும்.  நிலவைப்போல களங்கமில்லாத மனமும், வாழ்வும் வேண்டி இந்நாளில் இறைவனை அடிப்பணிவோம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.