அமாவாசை தினத்தில்காகத்துக்கு சோறு வைப்பது ஏன்?!


பித்ருக்காளான நீர்த்தார் கடன், அமாவாசை தினத்தில் படையலிட்டு வணங்கியபின் காக்கைகளுக்கு உணவு வைப்பது ரொம்ப முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. இப்படி உணவிடுவதன்மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். 

சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் சாவை தள்ளிப்போடலாமெனவும், பாவக்கணக்கு குறையுமென்பதும் நம்பிக்கை. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வதாய் சொல்றாங்க.

எமனும், சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். 

யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும், நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின்முன் பலமுறை குரல் கொடுக்கும். காலையில் நாம் எழும்முன்னரே காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும். காகம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே சில செயல்களை உணர்த்துகிறது. நமது வாகனம், குடை, காலணி, உடல் மீது காகம் தீண்டுவதன்மூலம் அகால மரணம் ஏற்பட உள்ளதை அறிவிக்குமாம். நாம் செல்லும் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்த பயணத்தை தவிர்க்கலாம். 

காகம் தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால் தங்கம் மூலம் லாபம் கிடைக்கும். தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் தயிர், எண்ணெய், உணவு லாபம் கிடைக்கும். மேற்கு திசை நோக்கி கரைந்தால் நெல், முத்து, பவளம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வடக்கு திசை நோக்கி கரைந்தால் ஆடைகள், வாகனங்கள் வந்து சேரும்.  ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை காண நேர்ந்தால் இனிய செயல் ஏற்பட உள்ளதை குறிக்கும். காகம் உங்கள் எதிரே வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால் தன லாபம் கிட்டும். இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் சென்றால் தன நஷ்டம் உண்டாகுமென்பது ஜோதிடம் சாஸ்திரம் சொல்வது,

இதில்லாம அறிவியல் காரணமும் ஒன்றுண்டு. காக்கைக்கு சோறு வைக்கும்போது அது சோறு மட்டும் சாப்பிடாம அருகிலிருக்கும் புழு, பூச்சி, தோட்டத்தில் செத்து விழும் எலி, பல்லி மாதிரியானதையும் சாப்பிட்டு வீட்டை சுத்தமா வச்சிக்கவும் உதவுது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews