ஐப்பசி மாத ராசி பலன்கள்

மேஷம்- மோசமில்லை- இதனுடைய நட்சத்திரங்களாக வருவது அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்து கொண்டிருக்கும் ராகுவால் அனுகூலங்கள் தொடரும் தேவையற்ற விவாதங்கள், சண்டைகள் சமூக வலைதள விவாதங்கள் வம்புகள் இவற்றில் ஒதுங்கி இருப்பது நன்மையை தரும்.

788c19722c0531d7252029def2d31ddc

சுக்கிரனாலும், குருவாலும் அக்டோபர் 29க்கு பிறகு நன்மை உண்டாகும். இதுவரை உங்களுக்கு அஷ்டம குருவாக இருந்து உங்களை பல முடக்கங்களில் வைத்திருந்த குருவின் பெயர்ச்சி இம்மாதம் வருகிறது. இதனால் ஒரு வருடமாக இருந்த கடும் பிரச்சினைகள் குறையும்.

மேஷராசிக்காரர்கள் எப்போதுமே முருகப்பெருமானை விடாமல் கெட்டியாக பிடித்து கொள்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும் திருச்செந்தூர் முருகன் வழிபாட்டை மேற்கொள்ளவும் அங்கு சென்று வரவும் முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம்: ரோகிணி, மிருக சீரிடம்1,2,3

எல்லாவற்றையும் இழந்து வருகிறீர்கள் துன்பம் ஒன்றே உங்களை விடாமல் துரத்தி வருகிறது. ஏழரை சனி நடைபெறும் விருச்சிகராசி, தனுசு ராசிக்காரர்கள் அவஸ்தை என்று பலரும் நினைத்திருக்க அஷ்டமச்சனியால் சொல்லோணா துயரங்களை சந்தித்து வருகிறீர்கள்.

சுக்கிரன் உங்க ராசியின் அதிபதி அவர் அசுர குரு அவருக்கு எதிரிதான் குருபகவான் தேவ குரு. ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு அஷ்டம குருவாக இவர் வருகிறார். இது இந்த ஐப்பசி மாதத்தில் தொடங்குகிறது.

உங்க ராசிக்கு 8 மற்றும் 11ஆம் அதிபதி அவரே. அவர் ஆட்சி பெற்று அமரும் போல பல நன்மைகள் ரிஷபத்திற்கு நடைபெறப்போகிறது. ரிஷபம் குரு எட்டாம் வீட்டில் போகிறார். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தை அடைகிறார் .

இதனால் எதிர்பாராத பல மாற்றங்கள் வந்து சேரும் இப்போது இருக்கும் நிலையில் இருந்து கொஞ்சம் விடுதலை கிடைக்கும். இருப்பினும் அடுத்து வரும் சனிப்பெயர்ச்சியில் அஷ்டம சனி உங்களை விட்டு கடந்தால்தான் அனைத்தும் சரியாக வரும்.

தேவையில்லாதவிசயங்களான கடன் வாங்குவது, வீண் வம்புகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நாம் உண்டு நம் வேலை உண்டு என்று நினைத்திருந்தாலே அனைத்தும் நல்லவையாக நடக்கும். நல்லவர்கள் கெட்டவர்களை சரியான முறையில் அறிந்து கொண்டிருக்க வேண்டியதும் இந்த ராசிக்காரர்களுக்கு அவசியம் ஆகும்.

திருவிடைமருதூர் சென்று மகாலிங்க சாமியை வணங்கி வரவும்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 திருவாதிரை புனர்பூசம் 1, 2,3

எந்த ஒரு விஷயத்தையும் கடும் முயற்சிக்கு பிறகே நீங்கள் செய்ய வேண்டி இருக்கும், ஆன்மிகரீதியான நம்பிக்கை கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு பணம் அதிக அளவு வரும். கொடுத்த கடன் திருப்பி வரும். மனைவியுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது அப்படியே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் இம்மாத இறுதிக்குள் சண்டைகள் முடிவுக்கு வந்து விடும்.

உங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோவில் சென்று நெய்விளக்கு இட்டு தொடர்ந்து புதன்கிழமைகளில் மன அமைதிக்காகவும் நிம்மதிக்காகவும் வழிபட்டு வரவும்.

கடகம்: புனர்பூசம்4 பூசம், ஆயில்யம்

இது ஒரு குழப்பமான ராசியாகும் சந்திரனின் ராசி என்பதால் மனோகாரகன் ஆன சந்திரன் போல மனதை போட்டு குழப்பி கொண்டே இருப்பர்.

எந்த ஒரு பிரச்சினையிலும் தீர்வு கிடைத்தாலும் கிடைக்காதது போலவே நினைப்பர். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. என்ற வரிகளை இவர்களிடம்தான் சொல்ல வேண்டும் எப்போதும் பிரச்சினைகள் இவர்களை துரத்துவதாகவே இவர்கள் நினைத்து கொள்வர்.

சுக்கிரன் கேது சனி உங்களுக்கு நன்மை செய்ய இருக்கிறது.பெரியவர்கள் ஆலோசனையை கேட்பது நல்லது அதையும் வாங்கி குழப்பிக்கொள்ளாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புகள் உண்டு.

தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது. திருப்பதி சென்று வருவதும் பவுர்ணமி விரதம் இருப்பதும். திருச்சி மாவட்டம் குணசீலம் போன்ற பெருமாள் கோவில்கள் அடிக்கடி சென்று வருவதும் இவர்களுக்கு பலம் தரும் பலன் தரும்.

சிம்மம்:மகம், பூரம், உத்திரம்- நியாயமாக பேச தயங்க மாட்டார்கள் அதை கடுமையாக அந்த சிங்கத்துக்கே உள்ள கர்ஜனையோடும் கோபத்தோடும் இவர்கள் சொல்வதால் இவர்கள் நல்லதை சொன்னாலும் நல்ல பெயர் என்பது இவர்களுக்கு கிடைப்பது கடினம்.

மாத ஆரம்பத்தின் சுக்கிரன், சூரியன், ராகு ஆகியோர் மாத ஆரம்பத்தில் நல்லதை செய்வார்கள்.பெண்களில் மகம் நட்சத்திரத்தாருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு.குருப்பெயர்ச்சிக்கு பிறகு மாற்றங்கள் நிகழும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி;உத்திரம் 2, ,3,4 ஹஸ்தம், சித்திரை 1,2

சுக்கிரனால் பொருளாதார ரீதியான முன்னேற்றத்துக்கு வகை கிடைக்கும் சுக்கிரன் முழுவதும் இந்த மாதம் உங்களுக்கு நன்மை செய்வார்கள்.

தொழில் சிறக்கும் , மனைவியுடன் இணக்கம் உண்டாகும் உங்கள் ராசிநாதனான புதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் ஸ்ரீரங்கம் புதன்கிழமையன்று சென்று ரங்கநாதரை வணங்கவும் இதனால் சுக்கிரனின் பலத்தை இன்னும் அதிகரித்து புதனால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும்`உங்களை பெருமாள் காப்பார் ஏனென்றால் இரண்டுக்கும் அதிபதி ஸ்ரீரங்கம் பெருமாள்தான்.

துலாம்:சித்திரை 3,4சுவாதி, விசாகம்,1,2,3, சுக்கிரன் ராசிநாதனாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தட்டுப்பாடு இருக்காது . இந்த மாதம் விருந்து விழா, சுற்றுலா என நாட்கள் செல்லும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

குருப்பெயர்ச்சிக்கு பிறகு மரியாதை மதிப்பு சமூக அந்தஸ்து அதிகரிக்கும் அதற்கு நீங்கள் வரும் அக்டோபர் 28 வரை காத்திருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சென்று அங்குள்ள ஆதிரத்தினேஸ்வரர் சினேகவல்லி அம்மனை வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்:விசாகம் 4, அனுஷம், கேட்டை.

ஏழரைச்சனியின் கொடூரப்பிடியில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி போய் இருக்கும் விருச்சிக ராசி நேயர்களே நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் ராசி பொலிவுற போகிறது. இந்த மாதம் அக்டோபர் 28ல் நடக்கும் குருப்பெயர்ச்சியால் உங்களின் பல வருட கஷ்ட வாழ்வு அஸ்தமனமாக போகிறது.

ஏழரைச்சனியின் கொடூர தாக்கத்தில் உங்களை போல யாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். வரும் கந்த சஷ்டிக்கு விரதம் இருந்தோ அல்லது 6 நாளும் விரதம் இருந்தோ முருகப்பெருமானின் கடும் மந்திரங்களை சொல்லி வழிபட்டு வாருங்கள். கந்த சஷ்டி இறுதி நாளான சூரசம்ஹாரத்தன்று திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

தனுசு:மூலம், பூராடம், உத்திராடம்

ஏழரை சனியின் ஜென்ம சனிக்காலத்தில் இருந்து வரும் தனுசு ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் வரும் ஜென்ம குரு பாதகம் செய்யாது. ஜென்மத்தில் குரு அமர்ந்தால் அது போதிய வேலை செய்யாது குரு பார்ப்பவர்களைத்தான் நன்மை செய்வார் எனவும் சொல்லப்பட்டாலும். தனுசு ராசியின் ராசிநாதனான குரு அவர் வீட்டிலேயே வந்து உட்கார்கிறார். அதனால் சொந்த வீட்டுக்கு நன்மைகள் செய்வார். இந்த ஐப்பசி மாதம் தீபாவளிக்கு பிறகு நடக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்லதை செய்யும்.

ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது. குருமார்களையும் அவர்களின் ஜீவசமாதிகளையும் வணங்குவது நல்லது. திருப்பரங்குன்றம் சென்று முருகனை வணங்கி அங்கிருக்கும் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகளை வணங்கி வரவும்.

மகரம்– உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம்,1,2

ஏழரை சனியின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து வரும் மகர ராசிக்கார்களுக்கு ராசிநாதன் சனியால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இருந்தாலும் சனி நியாயகாரகன் தன் வீடாக இருந்தாலுமே அவரவர்களின் கர்ம வினைப்படி உள்ள தண்டனையை இந்த ஏழரை சனிக்காலத்தில் கொடுக்கிறான்.

இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் நடக்கு மாதமாகவும் அதிக சுப நிகழ்ச்சிகள் உள்ள விழாக்களில் பங்கேற்கும் மாதமாகவும் உங்களுக்கு காட்டுகிறது.

வீண் பேச்சை குறைக்கவும், பொறுமையாக இருப்பதே சாலச்சிறந்தது எதிலும் பொறுமையை மீறி விட்டால் அது நல்ல விசயமாக இருந்தாலும் உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் அதிகம் உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்.

சனிக்கிழமைகளில் பெருமாளை தொடர்ந்து வழிபட்டு வரவும்.

கும்பம்:அவிட்டம் 3,4 சதயம் பூரட்டாதி 1,2, 3

உங்களுக்கு இந்த மாதம் குரு பகவான் சாதகமான இடத்துக்கு வருகிறார்.இதனால் உங்கள் மதிப்பு மரியாதை உயரும், நண்பர்கள் பலம் இருக்கும்,சகோதரர்கள் உதவுவார்கள்.அரசு வழி வேலை வாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை கிடைக்கும் அரசு கொடுக்கும் டெண்டர் போன்றவற்றிலும் முன்னுரிமை கிடைக்கும் போக்கு நிலவுகிறது.

செவ்வாயால் உஷ்ண வியாதிகள் ஏதாவது சந்திக்கலாம். வைத்தீஸ்வரன் கோவில், திருநள்ளாறு, போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வருவது கும்பராசிக்கு நன்மை பயக்கும்.

விரைவில் வர இருக்கும் ஏழரைச்சனியில் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் வகை செய்யும்.

மீனம்;பூரட்டாதி4,உத்திரட்டாதி, ரேவதி

புதன் சுக்கிரன் இம்மாதம் முழுவது நன்மை தந்து கொண்டு வருவார்கள். உங்கள் ராசிநாடன் குருவின் பத்தாமிட பெயர்ச்சியும் தொழிலில் நல் முன்னேற்றத்தை கொண்டு சேர்க்க இருக்கிறது.

தொழிலில் தொய்வடைந்து இருந்தவர்கள் இந்த மாதம் முதல் வீறு கொண்டு எழப்போவது உண்மை.

குறும்புகள், சேட்டைகள் போன்றவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்து தொழிலில் வேலையில் கவனம் செலுத்தவும்.

திருச்செந்தூர் சென்று வழிபட்டு வரவும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews